மாங்காய் ஊறுகாய்
மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும்ன்னு சொல்லுவாங்க. சாதம், குழம்பு எதுவாக இருந்தாலும் மாங்காய் ஊறுகாய் ஓன்று போதும்.
தேவையானவை :
மாங்காய் – 1
பச்சை மிளகாய் – 2
மிளகாய் பொடி – 2 தே கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே கரண்டி
உப்பு தேவைக்கு
பெருங்காயப் பொடி – 1/4 தே கரண்டி
தாளிக்க தேங்காயெண்ணெய் – 2 தே கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/4 தே கரண்டி
வெந்தயம் – 1/4 தே கரண்டி
செய்முறை :
- மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- பச்சை மிளகாயையும் சிறிதாய் அரிந்துக் கொள்ளவும்.
- உப்பு, காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கரண்டியால் விரவி வைக்கவும். மிளகாய் தூள் மட்டும் மாகாயின் புளிப்புக்கு ஏற்ப சேர்க்கவும். மாங்காய் அதிகம் புளித்திருந்தால், மிளகாய் தூள் சற்று அதிகம் போடவும். புளிப்பு குறைவாக இருந்தால், அதையும் குறைத்துக் கொள்ளலாம்.
- ஒரு பத்து நிமிடமாவது இந்த கலவை ஊறவேண்டும். அப்போதுதான் அந்த உப்பு கரையும்.
- வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அதில் இந்த மாங்காய் கலவையை கொட்டி இளம் சூட்டில் கலந்து இறக்கவும்.
- இனி ஆறியவுடன் எடுத்து பிரிஜில் வைத்துக்கொள்ளலாம். ஒரு நான்கு நாட்கள் அப்படியே இருக்கும்.
- தயிர் சாதத்திற்கு உகந்தது.