உளுந்தம் சாதம்
உளுந்தம் பருப்பு
உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.
உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. (நன்றி : விக்கி )
உளுந்தின் பயன்கள் :
- பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்க உதவுகிறது.
- பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்கவும் பயன்படுகிறது.
- இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது.
- கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
- முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது
உளுந்தம் சாதம்
உடைத்த உளுந்து கொண்டு சோறு ஆக்குவது உடலுக்கு மிக நல்லது. அரிசி, உளுந்து, தேங்காய், மிளகாய் வற்றல், வெள்ளை பூண்டு, சீரகம் ஒன்றாய் சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட.
பெரும்பாலும் பச்சரிசி தான் உபயோகிப்பது வழக்கம். புழுங்கல்அரிசியும் பயன்படுத்தலாம்.
தேவையானவை :
பச்சரிசி – 200 gm அல்லது 1 கப்
கருப்பு உளுந்து (உடைத்தது) – 100 gm அல்லது 1/2 கப்
தேங்காய் – 2 மே. கரண்டி
வெள்ளை பூண்டு – 4
சீரகம் – 1/2 தே கரண்டி
வெந்தயம் – 1/4 தி கரண்டி
உப்பு தேவைக்கு
தாளிக்க :
கடுகு – 1/2 தே கரண்டி
மிளகாய் வற்றல் – 3
காயம் – 1/2 தே கரண்டி
கருவேப்பிலை – கொஞ்சம்
செய்முறை :
உடைத்த கருப்பு உளுந்தை நன்கு சிவக்க வறுக்கவும். சரியாக வறுபடாவிட்டால் பச்சை வாசம் போகாது.
அரிசியையும் கை சூடு பொறுக்கும் அளவுக்கு சிறிது வறுத்து கொள்ளவும்.
இரண்டையும் நன்கு கழுவிக்கொள்ளவும்.
பூண்டு மற்றும் வெந்தயம், சீரகம் இவற்றையும் இலேசாக வறுத்து கழுவி வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும்.
தேங்காயை நிறம் மாறாமல் வறுத்து அதில் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும்.
ஒரு கப்புக்கு 3 கப் தண்ணீர் சேர்க்கவும். நாம் போட்டிருக்கும் 1 1/2 கப்புக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக வைத்து எடுக்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சாதத்துடன் கலக்கவும்.
தொட்டு கொள்ள :
உளுந்தம் சாதத்துடன் தொட்டு கொண்டு சாப்பிட மல்லித்துவையல் நன்றாக இருக்கும். செய்முறை இங்கே.